கான மயிலாட கண்டிருந்த வான்கோழி !! ...............................................
அன்றே சொன்னார் ஔவையார் !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் எனது இதயம்
கனிந்த நன்றியும் வணக்கங்களும் நிறைந்த
அதிகாலை ( 04.15 AM) பதிவிற்கு கட்டுரையை
எதிர்பார்த்து காத்து நிற்கும் முக-நூல் வாசகர்கள் வாழ்க !! வருக !!வாழ்வினில் உயர்வு பெருக !! என எடுத்துரைத்து கட்டுரையை இங்கே தொடர்கிறேன்.
இன்றைய தினம், எனது இந்த வலைதளத்தில்
நான் தமிழ் மூதாட்டி ஔவையார் எழுதிச்சென்ற காலத்தால் அழிக்க முடியாத, மறக்க முடியாத பாடல் ஒன்றினை பதிவு செய்வதில் மிகவும் மன மகிழ்ச்சி அடைகிறேன்.
பாடலைப் பார்ப்போமா வாசகர்களே !!
கான மயிலாட கண்டிருந்த வான்கோழி !!
தானுமதுவாகப் பாவித்து !!-தானுந்தன்
பொல்லாச்சிறகினைவிரித்தாடினார்போலாகும்!!
கல்லாதான் கற்ற கல்வி !!
பொருள் :- கானகத்தில், ( காட்டினில், வயல்
வெளிகளில் பறந்து திரிகின்ற ஆண்மயில்
தனது சிறகினை விரித்து ஆடுவதைக்கண்டு,
வான்கோழி அதுவும் தன்னை மயில் என்று
நினைத்துக்கொண்டு தனது கரடுமுரடு நிறைந்த
சிறகுகளை விரித்தாடுமாம். இது எதற்கு இணை
என்று பார்த்தால், கல்வி கற்றவர் வாழுகின்ற
கல்விக்கூடங்களில், உண்மைக்கவி அரசர்கள்
அவரவர்கள் இயற்றிய பாடல்களை அங்கே அரங்கேற்றம் செய்து வருவதைக்கண்டு, கல்வியே கற்காத,பள்ளிக்கூடமே செல்லாத, மூடன் ஒருவன் ஏதோ ஒன்றினை எழுதி அதனை கவி என்று பெயரிட்டு கற்றவர் சபைதனில் கற்பிக்க நினைப்பதற்கு ஒப்பாகுமாம். இது தமிழ் மூதாட்டி ஔவையார்நமக்கு அருளிச்சென்ற பாடலும் அதன் பொருளும் ஆகும்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
பின் குறிப்பு :- நான் இப்போது தமிழகத்தை சூழ்ந்திருக்கும் அரசியல் மேகங்களுக்காக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போலவே தானும் அவர் (ஜெ) அணிந்துள்ளது
போன்று உடை அலங்காரம், சிகை அலங்காரம், நெற்றிப்பொட்டு,இவைகளை மாற்றி மறைந்த ஜெயலலிதா போலவே தன்னை அலங்காரம் செய்துகொண்டு வலம் வந்து கொண்டிருக்கும் சசிகலாவுக்காக இந்தப்பாடலை நான் இங்கே பிரசுரித்திருக்கிறேன் என்று எனது அன்பு வாசகர்களுள் யாரேனும்,எவரேனும், நினைத்துப்பார்த்தால், அதற்கு இந்தக்
கட்டுரை எழுதும் நான், எந்தவிதத்திலும் பொறுப்பு அல்ல என்பதை மிகத்தெளிவாகக் குறிப்பிட விழைகிறேன். நன்றி. வணக்கம்.